சவுதி அரேபியாவில் நடைபெறும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கடந்த முறை ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் முறியடித்தார்.
இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2025 ஐபிஎல் ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு அணியும் 120 கோடி ஏலத்தொகையில், 6 ஆர்டிஎம் கார்டுடன் ஏலத்தில் தங்களது அணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுட்டுள்ளனர். இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
அர்ஷ்தீப் சிங்
ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக அர்ஷ்தீப் சிங் ஏலத்திற்கு வந்த நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க முதலில் சென்னை மற்றும் டெல்லி அணி போட்டியிட்டனர். பின்னர் பெங்களூரு அணியும் போட்டியிட சென்னை பின்வாங்கியது. தொடர்ந்து டெல்லியும், குஜராத அர்ஷ்தீப் சிங்கை ஏலத்தில் எடுக்க போட்டியிட்ட நிலையில்,₹18 கோடியாக ஏலத் தொகையை சன்ரைசர்ஸ் அணி உயர்த்திய நிலையில், திடீரென ஏலத்திற்கு வந்த பஞ்சாப் அணி RTM கார்டை பயன்படுத்தி ₹18 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
ககிசோ ரபாடா
தென்னாப்ரிக்க வீரரான ககிசோ ரபாடா ரூ. 2 கோடி அடிப்படை விலைக்கு 2-வது நபராக ஏலத்திற்கு வந்தார். முதலில் பெங்களூரு அணியும், குஜராத்தும் மாறி மாறி ஏலம் கேட்க, தன் பங்கிற்கு மும்பை அணியும் இணைந்து தன் பங்கிற்கு ஏலத்தொகையை அதிகப்படுத்தியது. இறுதியில், ககிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ₹10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதற்கு முன்னர் ககிசோ ரபாடா பஞ்சாப் அணியில் இருந்தது தற்போது குஜராத் அணிக்கு மாறியுள்ளார்.
ஜாஸ் பட்லர்
இங்கிலாந்து வீரரான ஜாஸ் பட்லர் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். முதலில் பஞ்சாப் அணியும், குஜராத் அணியும் மாறி மாறி சண்டை போட்ட நிலையில், இறுதியில், இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. இதற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாஸ் பட்லர் 20 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்படுவார் என்று பெரும்பான்மையான கருத்துகணிப்பில் கூறப்பட்ட நிலையில், 15.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஷ்ரேயஸ் ஐயர்
இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ₹26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது . ஐபிஎல் ஏல வரலாற்றில் இதுவரை மிட்செல் ஸ்டார்க் மட்டுமே அதிகபட்ச தொகையான ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். தற்போது இந்த சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் முறியடித்தார். தற்போது அவர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கேகேஆர் அவரை அணியில் தக்கவைக்காததால், தற்போது பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ₹11.75 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் கேகேஆர் அணியும், டெல்லி அணியும் ஏலத்தில் எடுக்க சண்டையிட்டனர். பின்னர் ஆர்.சி.பி அணியும் சேர்ந்து போட்டியிட்டது. இறுதியில், டெல்லி அணி மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் ₹24.75 கோடி என்ற உச்சபட்ச விலைக்கு கொல்கத்தா அணி இவரை ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரையும், கொல்கத்தா அணி தக்கவைக்காத நிலையில், ஐபிஎல் 2025 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.